பெரியகுளம் அருகே, மஞ்சளாறு அணை நீர்வரத்து பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறையினர் அதிரடியாக அகற்றியுள்ளனர்.




தேனி மாவட்டம் பெரியகுளம் தேவனம்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட புது அணைக்கட்டு ஆற்றுப்பகுதியில்  அரசுக்குச் சொந்தமான 73 சென்ட் நீர்ப்பிடிப்பு நிலத்தை கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி இன்பவள்ளி, பிரியா கண்ணன் மற்றும் சங்கிலி தேவன் மகன் கருப்புத்தேவன் ஆகியோர் சட்டவிரோதமாக மீண்டும் ஆக்கிரமித்திருந்தனர். 


அதில் ஆக்கிரமிப்பு செய்து அங்கு 41 தென்னை மரங்கள், 16 தேக்கு கன்றுகள், 20 வேப்ப மரங்கள் உள்ளிட்டவற்றை வளர்த்து விவசாயம் செய்து வந்துள்ளனர்.


​இதனால், அப்பகுதிகளில் உள்ள 9 கண்மாய்களுக்கு அணையிலிருந்து நீர் செல்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது.

​ஏற்கனவே கடந்த 2023-ஆம் ஆண்டு இதே இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்கு மரங்களை நட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.


 இதையடுத்து, மஞ்சளாறு அணை கால்வாய் பிரிவு-1 உதவி பொறியாளர் தளபதிராம்குமார் தலைமையில், தேவதானப்பட்டி  காவல்துறை மற்றும் வருவாய்த்துறை முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் இன்று முழுமையாக அகற்றப்பட்டு நிலம் மீட்கப்பட்டது.

அதேபோல் நீர் ஓடை செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்
Previous Post Next Post