தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழகம் கட்சி தொடக்க விழா சோளிங்கரில் நடைபெற்றது


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் “தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழகம்” என்ற புதிய அரசியல் கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு நிறுவனத் தலைவர் வே. பாலாஜி தலைமை தாங்கினார். விழா தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. மாநில பொதுச் செயலாளர் திலகவதி மற்றும் பொருளாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொள்கை பரப்பு செயலாளர் பரமேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் கட்சியின் கொள்கை வழிகாட்டி தலைவர்களாக திருவள்ளுவர், டாக்டர் அம்பேத்கர், பெரியார் ஈ.வே. ராமசாமி, பெருந்தலைவர் காமராசர், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவர்களின் கொள்கைகள் சமூகநீதி, சமத்துவம், மனிதநேயம் மற்றும் உழைப்பின் மரியாதையை அடிப்படையாக கொண்டவை என நிறுவனர் விளக்கினார்.

அதேபோல் கட்சியின் கொடி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. கொடியில் இடம்பெற்றுள்ள நீல நிறம் சமூகநீதி மற்றும் சமத்துவத்தை குறிக்கிறது. பச்சை நிறம் உழைப்பு, வளம் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. கொடியின் மையத்தில் இடம்பெற்றுள்ள உழைப்பாளர் சின்னம், நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பாளர்களே அடித்தளம் என்பதையும், உழைப்பாளர்கள் முன்னேற்ற பாதையையும் சுட்டிக்காட்டுகிறது.

நிகழ்வில் கலந்து கொண்டு மாநில தலைமை கௌரவ ஆலோசகர் வி. பாபு, மாநில தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் மதன், மாநில மகளிர் அணித் தலைவி குமுதவல்லி, மாநில ஒருங்கிணைப்பாளர் – எஸ். ஆனந்தன், மாநில இளைஞரணி தலைவர் பாலாஜி, மாநில துணை தலைவர் பாஸ்கர், மாநில அமைப்பாளர் கணேசன், மாநில துணைச் செயலாளர் மேரி கிரேசியா, மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ஜீவா, மாநில அமைப்பு செயலாளர் கூத்தபெருமாள் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநில நிர்வாக பொதுச் செயலாளர் – எஸ். ஆனந்தன் சிறப்புரையாற்றினார். விழாவின் இறுதியில் மாநில இளைஞரணி செயலாளர் சரவணபவ அனைவருக்கும் நன்றி கூறினார். தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட தொழிற்சங்க செயலாளர் செந்தில், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழகம், உழைப்பாளர்களின் உரிமைகள், சமூகநீதி மற்றும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளதாக விழாவில் தெரிவிக்கப்பட்டது. திரளான நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.
Previous Post Next Post