மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் .
திருவாரூர் மாவட்டம் , மன்னார்குடியில் உள்ள புகழ் பெற்ற வைணவ ஆலயமான ராஜகோபாலசுவாமி கோயிலில் இன்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் நடைதிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையொட்டி காலை 3 மணியளவில் ருக்மணி சத்யபாமா சமேதராக சன்னதியிலிருந்து புறப்பட்ட ராஜகோபாலசுவாமி கோயிலின் பிரகாரங்களில் உலாவந்தார். வேத கோஷ்டியினர் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாடினர். அதிகாலை 3.50 மணியளவில் நந்தவனம் மண்டபத்திலிருந்து யானை செங்கம்மா சொர்க்கவாசல் கதவை திறக்க பெருமாள் பரமபதவாசல் எழுந்தருளினார். இதில் ஏராளமாக பக்தர்கள் கோபாலா, கோவிந்தா என பக்தி பரவசம் முழங்க சுவாமியை பின்தொடர்ந்தனர். வைரமுடி சேவையில் பரமபதநாதனாக காட்சியளித்த ராஜகோபாலசுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று மாலை 6 மணி வரை சொர்க்கவாசல் மண்டபத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாளிப்பார். இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது.