தனது கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கு சத்துணவுக்கு தேவையான காய்கறிகளை இலவசமாக வழங்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த காரியமங்கலம் கிராம விவசாயி: பல்வேறு தரப்பினரும் விவசாயிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்…
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம், விக்கிரபாண்டியம் ஊராட்சி காரியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற விவசாயி. தற்போதைய கால சூழ்நிலையில் விவசாயம் என்பது லாபகரமான தொழில் இல்லை என்ற போதிலும் டெல்டா மாவட்டங்களில் தலைமுறை தலைமுறையாக விவசாயிகள் சேற்றில் கை வைத்தால்தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்ற உயரிய சிந்தனையில் நெல் சாகுபடி பணியினை மேற்கொண்டு உணவு உற்பத்தியை பெருக்க போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கோட்டூர் ஒன்றியம். காரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் நெல் சாகுபடி பணியை ஒருபுறம் செய்துவரும் போதிலும், தனக்கு சொந்தமான நிலத்தில் அவரை, கொத்தவரை, புடலை, வெண்டை, வெள்ளரிகாய், தக்காளி, முள்ளங்கி, கீரை வகைகள் என முதலான சத்தான 10க்கும் மேற்பட்ட காய்கறி வகைகளை பயிரிட்டு வருகிறார். மேலும் விவசாயி கண்ணன், விவசாய பணி மட்டுமன்றி தனது ஊராட்சியில் கல்வி பயிலும் மாணவ சமுதாயத்தையும் ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். அந்த வகையில் தனது விக்கிரபாண்டியம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கடந்த 7 ஆண்டுகளாக ஆண்டு இறுதி தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாலை நேரத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவை விவசாயி கண்ணன் வழங்கி வருகிறார். இதனால் மாணவ மாணவியர்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக விவசாயி கண்ணன் கடந்த மாதம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தனது நிலத்தில் விளைவித்த காய்கறிகளை எடுத்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் பேசிய விவசாயி கண்ணன், காரியமங்கலம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளிக்கு ஓராண்டுக்கு சத்துணவுக்கு தேவையான காய்கறிகள் தினசரி தேவையான அளவுக்கு இலவச தர விரும்புவதாகவும், இதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். விவசாயின் தன்னலமற்ற சேவையை மனதார பாராட்டிய மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உரிய அனுமதியினை பெற்று தருவதாக உறுதியளித்தார். சுயநலம் தவிர்த்து பொதுநலத்திற்காக குரல் கொடுப்பவர்கள் விவசாயிகள். ஆனால் கண்ணன் என்ற விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் வைத்த கோரிக்கையானது பொதுநலத்தையும் தாண்டி நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழும் மாணவ சமுதாயத்தின் வளர்ச்சிக்கானது என்பது நிதர்சனம்.
பேட்டி
1, கண்ணன் விவசாயி காரியமங்கலம்