ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அருகே அம்மூர் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 4 பேரை காவல்துறையினர் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியைச் சேர்ந்தவர்கள் அஸ்வின் நாயக் (35), அமித் நாயக் (27), விஜய் நாயக் (29) மற்றும் 27 வயதுடைய பெண். இவர்கள் 4 பேரும் இன்று காலை சுமார் 11 மணியளவில் அம்மூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் தீவிர விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டனர். இதில், அவர்கள் மறைத்து வைத்திருந்த 28 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 4 பேரையும் ராணிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 4 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.