திருவாரூர்
01.04.23
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தேரோட்டம் காலை 7:30 மணிக்கு துவங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆரூரா தியாகேசா என்ற கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
சைவத் தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் இன்று காலை 7:30 மணிக்கு துவங்கியது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தேரை வடம் பிடித்து துவங்கி வைத்தார்.
ஆழித்தேர் என்ற பெயருக்கு ஏற்றார் போல் இத்தேரானது 96 அடி உயரமும், 360 டன் எடையும் கொண்டு பிரம்மாண்டமாக ஆடி அசைந்து 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதுதிலிருந்தும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து வழித் தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு பணிக்காக 1500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கீழரத வீதியில் துவங்கிய தேரோட்டம் தெற்கு ரதவீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக வலம் வந்து இறுதியாக மாலை 7 மணி அளவில் நிலை அடியை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் திருவாரூர் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது .