மன்னார்குடி அருகே சுடுகாட்டிற்கு பாதையின்றி பல ஆண்டுகாலமாக துயரத்தை அனுபவித்து வரும் கிராமம்…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காசாங்குளம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இக்கிராம மக்களுக்கு தேவையான சாலைவசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி முதலான எந்தவொரு அத்தியாவசிய அடிப்படை வசதிகளும் இன்றி பல ஆண்டுகாலமாக இக்கிராம மக்கள் பல்வேறு இன்னல்களை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். . இக்கிராமத்தில் யாரேனும் உயிரழந்தால் அவர்களது உடலை அடக்கம் செய்ய கோரையாற்றில் இருந்து வந்த சிறிய பாலத்தின் வழியாக சுடுகாட்டிற்கு சடலத்தை கொண்டு சென்று உடலை அடக்கம் செய்து வந்தனர். ஆனால் தற்போது இப்பாலத்தை அகற்றிவிட்டு பல மீட்டர் உயர்த்திற்கு மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளதால் இறந்தவர்களி;ன் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல கோரையாற்றை கடந்து செல்ல வேண்டிய நிலையில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் காசான்குளத்தில் உயிரழந்த சாமிநாதன் என்பவரின் சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல அக்கிராம மக்கள் கோரையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் இறங்கி பாடையினை தலைக்குமேல் தூக்கியபடி கோரையாற்றை கடந்தனர். கோரையாற்றை கடந்து செல்ல முடியாத உயிரழந்தவர்களின் வயதான உறவினர்கள், உடல் ஊனமுற்றவர்கள் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் கஷ்டம். இறந்தாலும் கஷ்டம் என்ற நிலையில் காசாங்குளம் கிராம மக்கள் படும் வேதனையினை அரசு உணர்ந்து உடனடியாக சுடுகாட்டிற் கு செல்ல பாதை அமைத்து தர வேண்டுமென அக்கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.