விளங்கம்பாடி கிராமத்தில் கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழல்.
ஏஎஸ்பியிடம் புகார் மனு.
திண்டிவனம், ஜூலை 5:
விளங்கம்பாடி கிராமத்தில் கோயில் திருவிழா நடத்துவதில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஎஸ்பி அபிஷேக் குப்தாவிடம் ஒரு பிரிவினர் புகார் மனு அளித்தனர்.
திண்டிவனம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏஎஸ்பி அபிஷேக் குப்தாவிடம் விளங்கம்பாடி கிராமத்தை சேர்ந்த நடராஜ் என்பவர் கொடுத்த புகார் மனுவில், எங்கள் கிராமத்தில் முத்துமாரியம்மன் மற்றும் அய்யனாரப்பன் கோயில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. நான் முத்துமாரியம்மன் கோயிலுக்கு தர்மகர்த்தாவாக இருந்து வருகிறேன். கடந்த 2006 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக அய்யனாரப்பன் கோயில் அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட கோயிலை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி கடந்த 2011 ஆம் ஆண்டு ஊர் முக்கியஸ்தர்கள் ஆலோசனைக் கூட்டம் போடப்பட்டு, விளங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரை கோயில் திருப்பணிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு நிர்வாகியாக தேர்வு செய்தனர். பின்னர் 2012 ஆம் ஆண்டு மீண்டும் கிராம பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு கோயில் கும்பாபிஷேகம் மற்றும் மாரியம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா நடைபெற்றது. மேலும் அய்யனாரப்பன் கோயிலை முறைப்படி நிர்வாகிக்க 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி பூரணி பொற்க்களை சமேத அய்யனாரப்பன் சுவாமி ஆலய அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி அறக்கட்டளை தலைவராக சங்கர் என்பவரையும் துணைத் தலைவர் சத்திசீலன் மற்றும் 9 பேர் செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் கோயிலை முறைப்படி நிர்வாகிக்கப்பட்டு வந்தது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தற்போது உள்ள ஊராட்சி மன்ற தலைவர் உத்திரமணிக்கு எதிராக சங்கர் என்பவர் போட்டியிட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட மோதலையடுத்து திருவிழா நடத்துவதில் இரு பிரிவாக மாறியது. இதுகுறித்து மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் காவல்துறை மூலம் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் கோயில் திருவிழாவை நடத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஏஎஸ்பி அபிஷேக் குப்தா இரு பிரிவினரை அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.