கொம்புக்காரன்புலியூரைச் சேர்ந்த விவசாயிக்கு ரூ. 15 லட்சம் செலவில் வெண்கல சிலை

கொம்புக்காரன்புலியூரைச் சேர்ந்த விவசாயிக்கு ரூ. 15 லட்சம் செலவில் வெண்கல சிலை

தேனி, ஜூலை 18-தேனி மாவட்டம்
கடமலைக்குண்டு அருகே உள்ள கொம்புக்காரன்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமுத்தேவர். இவரது மனைவி பிச்சையம்மாள். இவர்களுக்கு பெரியஈஸ்வரன், சின்னஈஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் அனைவரும் தோட்டத்தில் உள்ள வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.  இந்நிலையில் கடந்த 2021ல் ஆண்டு ராமுதேவர் உயிரிழந்தார். அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த நிலையில் ராமுத்தேவரின்  உயிரிழப்பு அவரது குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக மனைவி பிச்சையம்மாள் கணவரின் இறப்பால் மிகுந்த வருத்தத்தில் காணப்பட்டார். இதற்கிடையே குடும்பத்திற்கு ஆணிவேராக இருந்த கணவர் ராமுதேவரின் திருஉருவ சிலையை தோட்டத்தில் எழுப்ப வேண்டும் என தனது ஆசையை ராமுத்தாய் மகன்களிடம் தெரிவித்தார். தாயின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய மகன்கள் இருவரும் கொம்புக்காரன் புலியூர்- மேலப்பட்டி செல்லும் சாலையின் அருகே அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில்  15 லட்சம் ரூபாய் செலவில் ராமுதேவரின் வெண்கல சிலையை அமைத்தனர். நேற்று சிலையை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் கண் கவர் வானவேடிக்கைகளுடன் ராமுதேவரின் திருவுருவ சிலையை குடும்பத்தினர் திறந்து வைத்தனர். விழாவில்  உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கணவரின் உருவத்தை திருவுருவ சிலையாக கண்டு மனைவி பிச்சையம்மாள் ஆனந்த கண்ணீர் வடித்தார். தாயின் ஆசையை நிறைவேற்ற தந்தைக்கு வெண்கல சிலை அமைத்த மகன்களுக்கு கடமலைக்குண்டு பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Previous Post Next Post