தேவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் உற்சவ பெருந்திருவிழா இன்று முதல் தொடக்கம்- மேளதாளங்கள் வானவேடிக்கையுடன் இரவு சாமி ஊர்வலம்!



தேவதானப்பட்டி  அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் உற்சவ பெருந்திருவிழா இன்று முதல் தொடக்கம்- மேளதாளங்கள் வானவேடிக்கையுடன் இரவு சாமி ஊர்வலம்!

 தேனி, நவ.05- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி  தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில்  வெகு விமர்சையாக கொண்டாடப்படும்  முக்கிய திருவிழாவான அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் உற்சவ பெருந்திருவிழா நவ 5,6,7 ஆகிய மூன்று நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாட கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 நாட்கள் கெடு விதித்து  திருவிழா சாட்டுதல் நிகழ்வு   அனைத்து சமுதாயத்தினர் முன்னிலையில் நடைபெற்று முடிந்தது . தேவதானபட்டியில் 18 பட்டி மக்களும் கொண்டாடும் முக்கிய திருவிழா-வாக அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருவிழா ஆண்டுதோறும்  கொண்டாடப்பட்டு வருகின்றது .
     இந்த திருவிழாவின் முக்கிய அம்சம் என்னவென்றால் புல்லக்காப்பட்டி பகுதியில் சாமி சிலை செய்யும் நபர்கள் பல நாட்கள் தவமிருந்து   மண்ணால்  ஸ்ரீ முத்தாலம்மன் சிலையை உருவாக்கி அதனை  மூன்று நாட்கள் வைத்து வழிபட்டு பின்பு தண்ணீரில் கரைத்து விடுகின்றனர்.  நவ 05ம் தேதி முதல் நாள் திருவிழாவில்  இரவு புல்லக்காப்பட்டி பகுதியில் இருந்து சாமி சிலையை மேளதாளங்கள் வான வேடிக்கை நிகழ்வுடன்  எடுத்து வந்து தேவதானப்பட்டி பகுதியில் உள்ள நாட்டாமைக்காரரின் வீட்டில் வைத்தல். நவ 06ல் இரண்டாம் நாள் திருவிழாவில் நாட்டமைக்காரரின் வீட்டில்  அம்மனுக்கு கண் திறந்து திருக்கோவிலில் வைத்து சக்தி கிடா வெட்டுதல் நிகழ்வு நடைபெற்று அனைத்து தரப்பு மக்களும் திருக்கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்வார்கள் . மூன்று நாட்கள் திருவிழாவின் முக்கிய நாளாக  கருதப்படும்   நவ 07ம் தேதி தெற்கு தெரு பகுதியில் இருந்து அதிகாலை முளைப்பாரி, பால்குடம் , மாவிளக்கு  மற்றும் இளைஞர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்தும்  மேளதாளங்களுடன் திருக்கோவில் நோக்கி  காந்தி மைதானம் பள்ளிவாசல் தெரு  வழியே சென்று திருக்கோவிலுக்கு சென்று சாமி வழிபாடு செய்வது. பின்பு தீச்சட்டி,அழகு குத்துதல் உள்ளிட்ட  நேர்த்திக்கடன்களை  அம்மனுக்கு விரதம் இருந்தவர்கள் செலுத்துவார்கள். அதன் பின்பு அன்று மாலைப் பொழுதில்  திருக்கோவிலிலிருந்து அம்மனை தெற்கு தெரு பகுதிக்கு பொதுமக்கள் உற்சாகத்துடன் அழைத்து வந்து  வைத்து பொதுமக்கள் அபிஷேகம் செய்து  மஞ்சள் நீராடி  மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி  திருவிழாவினை நிறைவு செய்வார்கள் பின்பு அம்மன் சிலையை அங்கிருந்து எடுத்துச் சென்று பூஞ்சோலைக்கு கொண்டு செல்வார்கள் .
        இந்த மூன்று நாள் திருவிழாவும் தேவதானப்பட்டி பகுதியில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதால் தேனி மாவட்டத்தில் முக்கிய திருவிழாவாக பார்க்கப்பட்டு வருகின்றது . முதல் இரு தினங்களில் ஆடலும் பாடலும், கரகாட்டம் என  இரவு முழுவதும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது உற்றார் உறவினர்களுடன் மகிழ்ந்திருப்பார்கள். தமிழகத்தில் எந்த பகுதிகளும் இல்லாத வகையில் இந்த திருவிழாவில் இளைஞர்கள் பல்வேறு தலைவர்களின் வேடம் அணிந்தும் சினிமா காட்சியை மிஞ்சும் அளவிற்கு  தங்களது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி ஆடி பாடி மகிழ்ச்சி அடைவார்கள் . சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை  தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பம் சுற்றி தங்களது திறமைகளை உறவினர்கள் முன்னிலையில் வெளிக்காட்டுவார்கள் . இத்தகைய சிறப்பு மிக்க  அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் உற்சவ பெருந்திருவிழா  நிர்வாக கமிட்டியை சேர்ந்தவர்கள் சமத்துவ திருவிழாவிற்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள  அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர்.
Previous Post Next Post