மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவத்தின் முதல்நாள் ராஜகோபாலன் கல்யாண திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். வைணவ ஆலயங்களில் மிகவும் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது. இக்கோவிலில் ஏகாதசி திருவிழாவின் முதல் பகுதியான பகல்பத்து உற்சவம் துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் மாலையில் ராஜகோபாலசுவாமி உள் புறப்பாடு கண்டருளிகிறார். இதன் ஒருபகுதியாக பகல்பத்து உற்சவத்தின் முதல்நாள் ராஜகோபால சுவாமி கல்யாண அவசர திருக்கோலத்தில் ருக்மணி , பாமா சமேதரராக முத்தவெளியில் பகல்பத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பெருமாளின் முன்பு ஒவ்வொரு ஆழ்வாராக கொண்டு வரப்படுகின்றனர். ஆழ்வார்கள் வரும்போது ஒவ்வொரு ஆழ்வார்களுக்கும் அவர்களுக்கு உரிய தனி நடை, தனி இசை பின்பற்றப்படுகிறது. இதனை தொடர்ந்து கோவில் யானை செங்கமலம் சாமரம் வீசியபடி பெருமாளை மூன்று முறை வலம் வந்து வணங்குகிறது. வருகின்ற 22ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியின் முதல் பகுதியான பகல்பத்து உற்சவம் நடத்தப்பட்டு 23ஆம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது .