மன்னார்குடியில் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை…

மன்னார்குடியில் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை… 


காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை பாசன மாவட்டமான திருவாரூர் மாவட்டம் முற்றிலும் விவசாயத்தை சார்ந்துள்ள மாவட்டம்.  இம்மாவட்டத்தில் விவசாயத்தை சார்ந்து இலட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்ட விவசாயிகளின் நலன்கருதி விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய ஏதுவாக மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியோடு மாவட்டத்தில் 450க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.இத்தகைய சூழலில் தற்போது மாவட்டம் முழுவதும் அறுவடை இயந்திரங்கள் மூலமாக சம்பா, தாளடி நெற்பயிர்கள் அறுவடை பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.  இதன்படி மன்னார்குடி, நீடாமங்கலம் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை அந்தந்த பகுதிக்கு உட்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்காக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை கொண்டுவந்து குவித்து வருகின்றனர்.  ஆனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒவ்வொரு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் 500 முதல் 600 மூட்டைகள் வரை மட்டுமே தினசரி நெல் கொள்முதல் செய்து வருகிறது.  இதனால் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆயிரத்தில் இருந்து 5000 நெல்மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படாமல் மலைபோல் தேங்கி கிடக்கின்றன.  இத்தகைய தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் பனிபொழிவு காரணமாக ஈரப்பதம் அதிகமாகி காணப்படுவதால்  கொள்முதல் நிலைய அதிகாரிகள் 17 சதவீத ஈரப்பதம் என்ற அரசின் விதிமுறையை காரணம் காட்டி கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை அலைகழித்து வருவதால் பொருளாதார இழப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.  இதுதவிர தற்போது சென்னை வானிலை மையம் திருவாரூர் மாவட்டத்தில் வரும் 1 மற்றும் 2 தேதிகளில் கனமழை அறிவிப்பால் விவசாயிகள் களக்கம் அடைந்துள்ளனர்.  எனவே அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தினசரி குறைவான எண்ணிக்கையில் நெல் மூட்டைகள்  கொள்முதல் செய்துவருவதால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க வழியின்றி குறைவான விலைக்கு அதாவது அடிமாட்டுவிலைக்கு தனியார் வியாபாரிகளிடம் நெல் மூட்டைகளை விற்பனை செய்துவரும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனை கருத்தில்கொண்டு தமிழக அரசு அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நாள் ஒன்றுக்கு 1000 நெல் மூட்டைகள் என்ற அடிப்படையில் உடனுக்கு உடன் விவசாயிகளது நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மன்னார்குடி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும் விவசாயிகளது உயிர்நாடி பிரச்சனையாக இருந்துவரும் இக்கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க முன்வராவிடில் நெல்மணிகளை சாலையில்கொட்டி தொடர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை எனவும் அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

பேட்டி 
1, ரெங்கையன்     விவசாயி  மன்னார்குடி 
2,  அருள்ராஜன்   விவசாயி  மன்னார்குடி
Previous Post Next Post