ஜன- 15
ஆவணம்: 1
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா செய்தியாளர்: இரா.இராஜா.
9655331932
கர்னல் ஜான் பென்னிகுயிக்-ன் 182வது பிறந்த நாள் விழா. தேனியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை ஒருபோதும் தமிழ்நாடு அரசு விட்டுக் கொடுக்காது என பேட்டி.
தென் தமிழக மக்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக். தாகம் தீர்த்த தந்தை பென்னி குயிக்-ன் பிறந்தநாள் விழா கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தாண்டு ஜனவரி 15ஆம் தேதியான இன்று பென்னி குயிக் -ன் 182 வது பிறந்த நாளை தேனி மாவட்ட மக்கள் சமத்துவப் பொங்கலாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும் அரசு விழாவை ஒட்டி தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பென்னிகுயிக்-ன் திருவுருவச் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன், எம்.எல்.ஏக்கள் கம்பம் -ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி - மகாராஜன், பெரியகுளம் - சரவணகுமார் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பலரும் பென்னிகுயிக்-ன் உருவப்படத்திற்குமலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், தமிழகத்தின் நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். மேலும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் நிலவும் பிரச்சனையை நம்முடன் நட்புடன் இருக்கும் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். முல்லைப் அணையின் தமிழக உரிமையை ஒருபோதும் தமிழக அரசு விட்டுக் கொடுக்காது எனத் தெரிவித்தார்.
பேட்டி: ஐ.பெரியசாமி ( தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்)