மதுரை மாவட்டம், ஒத்தக்கடைக்கும் கொடிக்குளம் பஞ்சாயத்திற்கும் உள்ள திருவள்ளுவர் நகர் பாலாஜி தனியார் மருத்துவமனையில் திடக்கழிவு நீர், சாக்கடை கழிவுநீர் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.


மதுரை ஒத்தக்கடை தனியார் மருத்துவமனையில் சுகாதார கேடு

மதுரை மாவட்டம், ஒத்தக்கடைக்கும் கொடிக்குளம் பஞ்சாயத்திற்கும் உள்ள திருவள்ளுவர் நகர் பாலாஜி தனியார் மருத்துவமனையில் திடக்கழிவு நீர், சாக்கடை கழிவுநீர் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.


 திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் பாலாஜி மருத்துவமனையில்  நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு பல்வேறு அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் மருத்துவம் பார்க்க வந்து செல்கின்றனர். 

இந்நிலையில், சுகாதாரத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய மருத்துவமனையே சுகாதார சீர்கேடு விளைவிக்கும் நிலையில் உள்ளதை கண்டு பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சி அடைகின்றனர்.

தற்போது தனியார் மருத்துவமனையின்  திடக்கழிவுநீர் வாசலில் பெருக்கெடுத்து சாலையில் ஓடுவதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் கழிவறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த பகுதியில் நிரம்பி ஓடுவதால் துர்நாற்றம் வீசுகிறது என்கின்றனர் அப்பகுதி வாழ் குடியிருப்பு பொதுமக்கள். இது குறித்து கேட்கும் போது அவ்வப்போது மட்டுமே கண்துடைப்பு வேலையாக கழிவுநீரை அப்புறப்படுத்தி விட்டு மறுபடியும் கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது, இந்த சாலையில் தேங்கியுள்ள நீர் மழைநீர் இல்லை, முழுவதும்  தனியார் மருத்துவமனையின் திடக்கழிவு நீர் என்கின்றனர்   அப்பகுதி பொதுமக்கள். மருத்துவமனைக்கு  வந்து செல்லும் உள்புறநோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையின் இந்த அவலத்தை பார்த்து முகம் சுளித்தபடி செல்கின்றனர்.

ஏற்கனவே "கொரோனா" போன்ற கொடிய நோய்கள் பரவிவரும் சூழ்நிலையில் நோயை தீர்க்கவேண்டிய மருத்துவமனையே நோயை பரப்புகின்றன இச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மதுரை யானைமலை ஒத்தக்கடை ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன், திருவள்ளுவர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவரும் வி.எம்.எம் திருமண மஹால் நிறுவனருமான பழனியப்பன், செயலாளர் அருள்ராஜா பொருளாளர் சங்கரராஜ் ஆகியோர் கூறுகையில்,  மதுரை மாவட்டம் கொடிக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட திருவள்ளுவர் நகரில் சுமார் 400 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
திருவள்ளுவர் நகர் குடியிருப்பு மக்கள் மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து செல்லும் மக்களின் பயன்பாட்டிற்கான பிரதான பொது சாலையில் தனியார் மருத்துவமனை வாசலில் இருந்து தினமும் திடக்கழிவு நீர் மற்றும் சாக்கடை நீர் நிரம்பி வழிந்து சாலையில் வருகின்றன. இதனால், இரு சக்ககர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இப்பகுதியில் செல்ல மிகவும் சிரமபடுகின்றனர். முக்கியமாக இரண்டு சக்கர வாகனத்தில் இந்த சாலையை கடக்கும் போது, வழுக்கி கீழே விழும் அபாயம் உள்ளது. இது மட்டுமில்லாமல் சாலையில் குளம் போல் காட்சியளிக்கும் கழிவு நீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால்பொதுமக்களும், நோயாளிகளும் நடந்து வருவதற்கே அஞ்சுகின்றனர். இந்த மருத்துவமனைக்கு வந்தால் தங்களது நோய் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் வருகிறார்கள்.  ஆனால் இந்த திடக்கழிவுநீரால் தங்களுக்கு வேறு ஏதேனும் நோய்த்தொற்று  ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். நோயை தீர்க்க வேண்டிய மருத்துவமனையே நோய்களை பரப்புகிறது,  எனவே இந்த கழிவுநீர் பிரச்சனை குறித்து நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்றும், சுகாதாரத் துறை, மதுரை மாநகராட்சி மற்றும் தனியார் பாலாஜி மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் தெரிவித்தனர்.
Previous Post Next Post