திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாததாலும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக கூறி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாததாலும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக கூறி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அய்யந்தோப்பு பகுதியில் உள்ள கல்லூரி சாலையில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு அங்கு தங்கி அருகில் உள்ள கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரிக்கு சென்று கல்வி பயிலும் வகையில் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 105 மாணவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அங்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததாலும், பாதுகாப்புகள் கேள்விக்குறியானதாலும் தற்பொழுது 45 மாணவர்கள் மட்டுமே தங்கி கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்த விடுதி கட்டிடம் கடந்த 1983 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலன் மற்றும் மலைவாழ் மக்கள் நலத்துறை அமைச்சர் விஜயசாரதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 49 ஆண்டுகளை கடந்த இந்த விடுதி கட்டிடம் சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும் மரங்கள் வளர்ந்தும், விடுதி வளாகம் முழுவதும் முட்புதர்கள் வளர்ந்து பேய் பங்களா போன்று காட்சியளிக்கிறது. விடுதியை சுற்றி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாடுகின்றன. கட்டிடங்கள் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளது. இதுகுறித்து விழுப்புரம் ஆட்சியர், திண்டிவனம் சார் ஆட்சியர், வட்டாட்சியர் என அதிகாரிகள் பலமுறை பார்வையிட்டு சென்றதோடு சரி. ஆட்சியும் மாறியது, ஆட்சியரும் மாறினர். ஆனால் இங்கு தங்கி கல்வி பயின்று வரும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. விடுதியின் சுவற்றைத் தொட்டால் 'ஷாக்' அடிப்பதாக இங்குள்ள மாணவர்கள் அதிர்ச்சி கலந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இங்குள்ள மாணவர்கள் உணவருந்துவதற்கு தட்டுகள் கூட இல்லாத அவல நிலை உள்ளது. இதன் காரணமாக சமையல் செய்யும் அண்டாக்களை மூட பயன்படுத்தும் பெரிய அளவிலான தட்டுகளில் ஐந்து மாணவர்களுக்கு மேல் சுற்றி அமர்ந்து ஜமபந்தி போஜனம் போல் உணவருந்தும் பரிதாப நிலையை பார்க்க முடிகிறது. 45 மாணவர்களுக்கும் ஒரே ஒரு கழிவறை மட்டுமே இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். மீதமுள்ள கழிவறைகள் பயன்படுத்த முடியாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. மாணவர்கள் தங்கி உள்ள அறைகள் எதற்குமே கதவுகள் இல்லாமல் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது. மழைக்காலம் நெருங்கி வருவதால் இங்கு உள்ள மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். இந்தப் பாழடைந்த கட்டிடத்தில் மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் மழைக்காலத்தில் இந்த கட்டிடம் இடிந்து விழுந்து அதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Previous Post Next Post