திருவாரூரில், ஓடம்போக்கி ஆற்றின் கரைகளை அகற்றி, ஆற்றின் அகலத்தில் பாதி அளவு மண் நிரப்பி, ஆற்றின் அளவை குறைத்து, நான்கு வழி சாலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை.



டெல்டா மாவட்டங்களின் மையபகுதியாக விளங்கும் திருவாரூர் நகர் பகுதி வழியாக ஓடம்போக்கி ஆறு செல்கிறது. திருவாரூரின் உயிர்நாடியாக விளங்கும் ஓடம்போக்கி ஆறு,   காவிரியாற்றின் கிளை நதியான வெட்டாற்றில் இருந்து பிரிந்து, சுமார் 20 கிலோமீட்டர் தூரம் திருவாரூர் நகர் வழியாக செல்கிறது. 

இந்த ஆற்று நீரானது, திருவாரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன நீர் வழங்குவதோடு, சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடிகள் நிலைத்தன்மைக்கு அடிப்படையாக உள்ளன. இதுமட்டுமல்லாமல் நகரில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகள் நிரப்புவதிலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. மழைக்காலங்களில் அதிகமான நீரை வெளியேற்றும் இயற்கை வடிகால்களாக  செயல்படுவதில் இவை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. 

இவ்வாறு திருவாரூர் மக்களுடன் நெருங்கி உறவாடும் ஆறுகளை ஒட்டி செல்லும் நெடுஞ்சாலையில், திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, திருவாரூர் ரயில்வே மேம்பாலம் வரை உள்ள ஒரு கிலோமீட்டர் தூர பகுதியினை நான்கு வழிச்சாலையாக மாற்றும்  பணி ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணியை மேற்கொள்வதற்காக ஓடம்போக்கி ஆற்றின் பெரும்பாலான பகுதிகள், மணல் கொண்டு மூடப்பட்டு, ஆற்றின் அளவு குறுக்கப்படுகிறது. 

ஓடம்போக்கி ஆற்றின் கரைகள் மற்றும் தொடர்புடைய வடிகால் வாய்க்கால்ளின்  கரைகள் அகற்றப்பட்டு, சாலை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இப்பகுதியில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தும், அரசும், அரசு அதிகாரிகளும்  மக்கள் நலனை புறந்தள்ளிவிட்டு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர் என திருவாரூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இயற்கையாக உருவான ஆற்றங்கரைகள் வெள்ள நீரை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு அமைப்புகளாக செயல்படுகின்றன. நீரின் ஓட்டத்தை சமநிலைபடுத்தும் இயற்கை தடுப்புகளாகவும் ஆற்றுக்கரைகள் செயல்படுகின்றன. அவற்றை அகற்றுவதென்பது ஆற்றின் இயல்பான ஓட்டத்தை மாற்றி எதிர்பாராத சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளை உண்டாக்கி திருவாரூர் பகுதியை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் சூழல் உருவாகும் என திருவாரூர் மக்கள் அஞ்சுகின்றனர். 

 ஒடம்போக்கி ஆற்றங்கரைகளில் இயற்கை அமைப்பு அகற்றப்பட்டால் மண் அரிப்பு அதிகரித்து, வெள்ள காலங்களில் கரைகள் இடிந்து நிலப்பரப்பு சேதமடையும். ஆற்றின் அகலம் குறையவோ அல்லது அதன் ஓட்டம் தடைபடவோ செய்தால், வடிகால் திறன் கடுமையாக பாதிக்கப்படும். இதன் விளைவாக சிறிய மழைக்கு கூட நீர் வெளியேற முடியாமல் நகர்ப்புற பகுதிகளில் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். 

குறிப்பாக, கான்கிரீட் மற்றும் தார்சாலைகள் நீர் ஊடுருவாத மேற்பரப்பு செயல்படுவதால் மழை நீர் நிலத்தடியில் செல்லாமல் தேங்கி “Urban Flooding” எனப்படும் திடீர் வெள்ள நிலையை உருவாக்கும். மேலும், நீரோட்டத்தின் திசை மாற்றப்பட்டு எதிர்பாராத பகுதிகளில் மணல் அரிப்பு மற்றும் கட்டிட சேதங்களை ஏற்படக்கூடும். எனவே, ஓடம்போக்கி ஆற்றின் கரைகளை அகற்றி சாலையை அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். 

முழுமையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மேற்கொண்டு, ஆற்றின் இயற்கை அகலம், ஓட்டம் மற்றும் கரை அமைப்பை பாதுகாக்கும் வகையில் மாற்று திட்டங்கள் உருவாக்க வேண்டுமென திருவாரூர் பகுதி மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்

பேட்டி : பூரண விஜய பூபாலன் - வழக்கறிஞர்
Filename TVR river problem news
Previous Post Next Post