விதிமுறைகள் மீறி செயல்படும் கல் குவாரிகளின் அனுமதி ரத்து செய்ய வேண்டும் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சல்மான் கான் வலியுறுத்தல்



இராணிப்பேட்டை:
இராணிப்பேட்டை மாவட்டம் அனந்ததல் கிராமத்தைச் சுற்றிய மலைப்பகுதியில் அரசு அனுமதித்த அளவை மீறி கல் வெட்டி, சட்டவிரோதமாக வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக பொதுமக்கள் சார்பில் “நாம் தமிழர் கட்சி” மாநில இளைஞரணி பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான் கான்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


அந்த மனுவில் அனந்ததல் ஊராட்சி எல்லைக்குட்பட்ட மலைப்பகுதியில் இயங்கி வரும் சில கல்குவாரிகளால் நிலத்தடி நீர் வற்றுதல், சாலை சேதம், தூசிப் பிரச்சினை போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகரித்து உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கனரக வாகனங்கள் அன்றாடம் செல்வதால் கிராமப்புறச் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 
 கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி அனந்ததல் கிராம கல்குவாரி பகுதிகளில் இராணிப்பேட்டை துணை ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வில், அரசு அனுமதியை மீறி கல் வெட்டப்பட்டதாக உறுதி செய்யப்பட்டு, அதற்கான அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆயினும், கல்குவாரி உரிமையாளர்கள் இதுவரை அந்த அபராதத் தொகையைச் செலுத்தவில்லை என்றும், தற்போது மீண்டும் அதே விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, “நாம் தமிழர் கட்சி” சார்பில் அனந்ததல் மலைப்பகுதியில் இயங்கி வரும் அனைத்து கல்குவாரிகளும் அரசு விதிமுறைகளின்படி செயல்படுகிறதா? என்பதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும்,
அனுமதி அளவை மீறி கல் வெட்டும் கல்குவாரிகளின் அனுமதிகளை ரத்து செய்ய வேண்டும்,
வெளிமாநிலங்களுக்கு சட்டவிரோதமாக கல் கடத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்
என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post