மயிலம் அருகே கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழல்.
வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம்.
திண்டிவனம்,
மயிலம் அருகே கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
மயிலம் அடுத்த விளங்கம்பாடி கிராமத்தில் முத்துமாரியம்மன் மற்றும் அய்யனாரப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாத திருவிழா நடத்துவது தொடர்பாக, முன்னதாக தொடர்ந்து திருவிழா நடத்தி வந்த முன்னாள் தலைவர் சங்கர் என்பவருக்கும், தற்போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ள உத்திரமணி என்பவருக்கும் திருவிழா யார் தலைமையில் நடத்துவது என கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கர் தரப்பினர் ஏஎஸ்பியிடம் புகார் மனு அளித்திருந்தனர்.
இதனால் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் வசந்தகிருஷ்ணன் தலைமையில் நேற்று இரு தரப்பினரை அழைத்து சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சங்கர் மற்றும் உத்திரமணி தரப்பினர் இருவரும் திருவிழா செய்வதற்கு தனித்தனி தேதியில் முடிவு செய்யப்பட்டதால், இருவருமே சட்டம் ஒழுங்கு பிரச்சனை இன்றி திருவிழா நடத்திக் கொள்ளலாம். கோயில் பூசாரி இரு தரப்பினருக்கும் திருவிழா நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கோயில் உண்டியலை இரு தரப்பினரும் திறக்கக் கூடாது. திருவிழா முடிந்த பின்னர் இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைப்படி உண்டியல் திறக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மயிலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், வருவாய் ஆய்வாளர்கள். செல்வம், சித்தார்த்தன், மற்றும் இரு தரப்பினரை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.