மன்னார்குடி 10.04.2022 ஞானபுரீ கோவிலில் ஸ்ரீ சீதா கல்யாண மஹோத்ஸவம்- திரளான பக்தர்கள் தரிசனம்.

மன்னார்குடி 10.04.2022 
ஞானபுரீ கோவிலில் ஸ்ரீ சீதா கல்யாண மஹோத்ஸவம்- திரளான பக்தர்கள் தரிசனம்.

ஞானபுரீ ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி கோவிலில் இன்று நடைபெற்ற ஸ்ரீ சீதா கல்யாண மஹோத்ஸத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே திருவோணமங்கலம் கிராமம் உள்ளது. இங்கு  ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானத்தின் ஞானபுரீ சித்திரகூட சேத்திரம் ஸ்ரீமங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு வலதுபுறம்  ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், இடதுபுறம் ஸ்ரீகோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், பவ்ய ஆஞ்சநேயர் சுவாமிகள் எழுந்தருளி உள்ளனர். 
இங்கு எழுந்தருளியுள்ள 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் இடுப்பில், நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் நீங்கி, மங்களம் உண்டாகும்.
 இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் பூச நட்சத்திரம் நவமி திதி சித்தயோகம் கூடிய இன்று (10ம் தேதி) காலை 10:00 மணிக்கு ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியார் சேத்திர சகடபுர ஸ்ரீ வித்யாபீடம்  வித்யாபிவிநவ  ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹா சுவாமிகள் அருளாசியுடன்  ஸ்ரீ சீதா கல்யாண மஹோத்ஸவம்  நடைபெற்றது . 
இரண்டு நாட்கள் நடைபெற மஹோத்ஸவத்தின் முதல்  நாளான நேற்று   (9ம் தேதி) காலை 8:30 மணிக்கு மங்கல இசை,  பஜனை, அஷ்டபதி திவ்ய நாம பஜனை நடைபெற்றன. இரண்டாம் நாளான  இன்று(10ம் தேதி)  காலை 8:30 மணிக்கு ஸ்ரீ சீதா கல்யாண வைபவம் தொடங்கி பகல் 12:00 மணிக்கு ஸ்ரீ ராமச்சந்திர பிரபு, சீதா பிராட்டியாருக்கு திருமாங்கல்ய தாரணம் செய்யும் நிகழ்வும், திருக்கல்யாண வைபவங்கள்  நடைபெற்றது. மதியம் ஒரு மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்  நடைபெற்றன. ஸ்ரீ சீதா கல்யாண வைபவத்தை விசலூர் ஸ்ரீ ராதா கிருஷ்ண பாகவதர் குழுவினர் செய்து வைத்தனர். கல்யாண வைபவத்திற்கான ஏற்பாடுகளை கோவில் தர்ம அதிகாரி ரமணி அண்ணா, ஸ்ரீ காரியம் சந்திரமௌலீஸ்வரர், அறங்காவலர்கள் ஜெகன்நாதன், வெங்கட்ராமன் மற்றும் திருவோணமங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர். 
ஸ்ரீ சீதா கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு புடவை, திருமாங்கல்ய சரடு, (மஞ்சள் கயிறு) மஞ்சள் கிழங்கு, குங்குமம் ஆகிய மங்களப் பொருட்களும், பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயமும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Previous Post Next Post